விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வந்த சங்கரலிங்கனார் சென்னை மாகாணத்திற்குத் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வேண்டும். அரசியல்தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழில்கல்வி,இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்று பன்னிரெண்டுகோரிக்கைகளுடன், 1956 சூலை 27ஆம் தேதிசூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால், பொதுவுடமைக் கட்சியினரின் ஆலோசனையின் பேரில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. ம.பொ.சிவஞானம்., அண்ணா, காமராசர், ஜீவானந்தம்உட்பட பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர். நாளாக நாளாகச் சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமானது.
76 நாட்கள்வரை அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. அக்டோபர் 10ஆம் தேதி அன்று நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அக்டோபர் 13, 1956 அன்று அவருடைய உயிர் பிரிந்தது. இறந்தபின் தன் உடலை கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைத்து,இறுதிமரியாதை செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறியிருந்தார் சங்கரலிங்கனார். கே.டி.கே. தங்கமணி, கே.பி.ஜானகியம்மாள் ஆகியோர் மருத்துவமனை பதிவேட்டில் கையெழுத்திட்டு, உடலைப் பெற்றனர். மதுரைத் தத்தனேரி சுடுகாட்டில் சங்கரலிங்கனார் உடல் தகனம் செய்யப்பட்டது. 1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியால் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காகத் தனி மசோதா கொண்டு வரப்பட்டபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து 1964 சனவரியில் சென்னை மாகாண சட்டமன்றத்தில், தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.பின்னாளில் ஆட்சிக்கு வந்த அண்ணா தலைமையிலான திமுக அரசு 1967,ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது. 1968 சூலை 18இல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம்செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர் 1968 நவம்பர் 23 இல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்துடிசம்பர் 1 இல் தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டபோது “சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும்” தெரிவிக்கப்பட்டது.